சனி, பிப்ரவரி 18, 2006

மூன்றாம் பால் !


பூங்குழலி ஆரணங்கு
தேன்வடியும் பூவதரம்
தீஞ்சுவைக்கவில்லையடி
தெவிட்டாத
தேனமுதே !


நான் சுவைக்க
வந்தருகில்
இழுத்தணைத்து
வைத்துவிடு
நாணமென்ன
நீ மொழிவாய்
ஆதவனை
தூங்கச்சொல்வேன்

கொல்லும்
விழியிரண்டை
இழுத்தணைக்கும்
இமைகளென
நித்தம் தழுவிடுவேன்
மூழ்கி
முத்தமெடுப்பேன்
மூர்ச்சையாகும் வரை !

பேதை
உன் வாயில்
ஊறும்
கள்
போதை
நித்தம் குடித்திடுவேன்
சித்தம்
போகும்வரை!


நானணைத்தால்
நாணலாடை
நாற்பதடி
போய்விழுமே
நான் விலகும்
போதினிலே
மீண்டும் ஒட்டிக்
கொள்ளுவதேன் ?


வெட்கஆடை
நீயணிந்து வெப்பமாக
வந்து நின்றால்
வேலியோரம்
உள்ள ஆசை
வேங்கையாகப்
பாய்ந்திடுமே

களைந்திடுவேன்
இருஆடை
களையாத
கூந்தலாடை
கலைந்திடுமே
தினம் காலை
சொல்லிடுமே
நம் காதை


இன்னும் என்ன
நாணமுகில்
பொழிந்திடுவாய்
காதல்மழை
இரைதேட
தொடங்கிடுவோம்
இருவருமே
களைக்கும்வரை...

திங்கள், பிப்ரவரி 13, 2006

காதலே தினம் !



தினமும் விழிக்கையில்
கூடவே விழிக்கிறது
உன் நினைவுகளும் !

கிளம்ப எத்தனித்து
குளிக்கிறேன்
நீராய் வழிகிறது
உன் நினைவுகள் !
வழக்கம்போல்
என்னைக்
குளிர்விக்கின்றது !

வெளியில் வருகிறேன்
என்
உடலெங்கும்
உன் முகம்
நீர்த்திவலைகளாய் !
துடைக்க மனமின்றி
என்னில் முளைத்த
உன்னைப்
பார்க்கிறேன்!

காலை உணவு
சட்டினியில்
அம்மாவின் சுவையும்
இட்லியில்
உந்தன் மென்மையும் !
சாப்பிட மனமின்றி
தட்டைப் பார்க்கிறேன் !
எனக்குள் நீ
பசித்திருப்பாயென
உண்கிறேன்!

செல்லும் வழியில்
கடந்த கூந்தலில்
மல்லிகை !
எங்கும்
பரப்புகிறது
உந்தன் வாசம் !
ஆழமாக சுவாசிக்கிறேன்
காற்றாய் நிறைகிறாய்
நெஞ்செங்கும் !

வந்த பேருந்தில்
வழிகிறது கூட்டம்
என்னுள்
எப்பொழுதும்
நிறைந்து வழியும்
உன்
நினைவுகளைப் போல !
இருந்தும் நுழைந்து
கொள்கிறேன்
தரிசனத்திற்குச்
செல்லும்
பக்தன் போல !

கல்லூரிக்குள் நுழைகிறேன்
வழியெங்கும்
உந்தன் வெட்கம் !
கொட்டிக்கிடக்கின்றன
குல்மொகர் மலர்கள்!
வீசும் காற்றில்
சிரிக்கும் பூச்செடிகள்
நீ வந்துவிட்டாயென
உணர்த்துகின்றன !


கருவறையாய்
என்
வகுப்பறை !
பயபக்தியுடன்
பார்க்கிறேன்
தேவி தரிசனம்
கோடி புண்ணியம் !
ஒரு பார்வையால்
இந்த பக்தனை
இரட்சிக்கிறாய் !


இடைவேளை!
ஏதோ கேட்கிறாய்
ஏதும் கேட்கவில்லை
இருந்தும்
தலையாட்டுகிறேன்
சிரிக்கிறாய்
பிறந்த சிசுவைப்போல!
காற்றில் பறந்த உன்
சிரிப்பை
பிடிக்க விழைகிறேன்
தட்டான் பிடிக்க
ஓடும்
சிறுவனைப்போல!

வெயில் சாயும் நேரம் !
கல்லூரி விடுகிறது
சொர்கத்தைச்
சுமந்து வருகிறேன்
உன் நிழல் என்மீது!
முத்தம்பெறத்
துடிக்கிறது
பட்டு ஒதுங்கும்
உன் தாவணி
அணைத்து விலக்குகிறாய் !

விடையளிக்கிறாய்
உயிர் பறிக்கும்
உன்
புன்னகையினூடே!
எமன்போல
கவர்ந்துசெல்கிறது
உன் வழிசெல்லும் பேருந்து!
முடிந்துபோனது
இன்றைய சொர்கநாள்!


இரவு
தடமெங்கும் இருள்
உன் கூந்தலைப்போல்
விரிந்து கிடக்கின்றது !
உன் எண்ணப்
படுக்கையில்
உன் நினைவுகளே
போர்வையாக
நினைவின்றிக்
கிடக்கிறேன் நான்!

புலன் விழிக்கிறது
நண்பன் சொல்கிறான்
நாளை காதலர் தினம்!
சிரிக்கிறேன்
காதலர்க்கு தினம்
இருக்கலாம்
காதலுக்கு ஏது தினம் ?
காதலே தினம் !

வியாழன், பிப்ரவரி 09, 2006

ஊடும் பொழுதுகள்


மயக்கும் விழிகளில்
மன்மதன் ஆயுதம்
ஏந்திழை மேனியில்
மோகனத் தாண்டவம்

வீழும் கார்குழல்
நாணலின் ஊர்வலம்
நினைக்கும் பொழுதினில்
நனையும் ஓர்வனம்

ஊடும் பொழுதுகள்
தோற்கும் நொடிகளில்
சீறும் வேங்கையாய்
கூடல் பிறந்திடும்

வேண்டாம் என்றுதான்
வாய்மொழி சொல்லினும்
வேண்டும் என்றெனை
விரல்கள் வீழ்த்திடும்

கெஞ்சும் இதழ்களில்
எந்தமிழ் கொஞ்சிடும்
விஞ்சும் கனங்களில்
சிந்தை அறுந்திடும்

கூடலின் பிறப்பு
ஊடலின் இறப்பு
ஆதலால் கூடுவீர்
அதன்முன் ஊடுவீர்!

திங்கள், பிப்ரவரி 06, 2006

புணர்ச்சிவிகுதி



வெள்ளிக்கிழமை
மாலை 5 மணி
கூட்ஸ் வண்டிவரும்
தண்டவாளம் போல
மனது தடதடக்க
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அமைதியாய் இருக்கும் வீதியினை !
உன் வருகை எப்போதும் நிகழலாம் !

மழைவரும் முன்னே
வீசும்
ஈரக்காற்றினைப்போல்
உன் வரவை முரசுகொட்டி
அறிவிக்கின்றன உன்
கொலுசுகள் !
தாயின் குரல் கேட்ட
கன்றுபோல்
துள்ளித்தாவுகிறது
மனசு !


ஒருமுறை என்னை
நிமிர்ந்து பார்க்கிறாய்
அந்த ஒரு நொடியில்
பூப்படைகிறது
என் காதல்
உன் கண்களாலே !
உயிர்பெற்றேன்
மயங்கிக்கிடந்த நான் !
தாவி ஓடுகிறது மனது
உன் பின்னே ஒரு
நாய்க்குட்டியைப்போல் !


கோயிலுக்குச் செல்கிறாய்.
தாயின் கரம் பற்றிச்
செல்லும் குழந்தையைப்போல்
உன் கால்தடம் பற்றி
தொடர்கிறேன்
அசையும் அழகுகள்
அசைக்கின்றன
தணிக்கிறேன் பார்வையை !


மலர்கின்றன உன்வழித்தடம்
எங்கும் பூக்கள்
மாலைக் கதிர்கள்
முழுதுமாய் தின்கின்றன
உன் அழகை
மூச்சடைத்துக் கொண்டது
இருந்தும் வழிநடத்துகிறது
உன் வாசம் !


கோயிலினுள் தேடுகிறேன்
காணவில்லை
சிலைகளுக்குள் மறைந்துவிட்டாய் !
குழப்பத்துடன் பார்க்கையில்
கண்டுபிடித்தேன்
ஒருசிலை அசைகிறது !
பிரகாரத்தில் நிற்கிறாய்
அம்மனுக்கே வழிபாடு
செய்யும் அம்மனாய் !

சுற்றிவருகிறேன்
நம் கண்கள் புணர்ந்து
மகிழ்கின்றன
நிற்கிறாய் ஒரு
தனிமையான சிலைமுன்
ஆயத்தம் செய்கிறாய்
கண்களின் ஒளியை
விளக்கில் ஏற்ற !
காற்றில் காதல் வாசம் !

இன்றாவது பேசிவிடு !
மண்டியிட்டுக் கெஞ்சுகிறது
குழந்தைபோல் மனசு !
அதன் அடத்தையெல்லாம்
நிறைவேற்றிவிடுகிறோமா என்ன?
ஆசையாக இருந்தாலும்
ஏதோ தடுக்கிறது
சுற்றிவருகையில்
சுட்டு எரிக்கிறாய்
என்னையும் விளக்கையும் !



மற்றுமொரு வெள்ளி
பிரிதொரு மாலை
அமைதியாய் என்முன்
கிடக்கிறது அதே வீதி !
மாறாமல் நிற்கிறேன்
உன் வரவுக்காக
துடிக்கும் இதயத்துடன்
இன்றாவது பேசேன் !
மனது தனது
அடத்தை தொடங்கிவிட்டது !

வியாழன், பிப்ரவரி 02, 2006

தொலைந்த நினைவுகள்





ஏன் எனக்கிந்த சோதனை ?
நான் என்னிடமில்லை
என்பதை அறியவில்லையா ?

கண்டநாள் முதலாய் நான்
தொலைந்து போனது
உனக்கு தெரியவில்லையா ?

ஊண் மறந்து நாட்கள்
பலவானது
உணர்வில்லையே ! ஏன் ?

பிரிதொருநாள் சந்திப்போம்!
வாக்கு பொய்யானது ! ஏன் ?

உறக்கம் பிடிக்கவில்லை
நினைவு மறக்கவில்லை
சித்தம் எனக்கில்லை
வேதனை வடியவில்லை !
இரக்கம் இல்லையா ?

பிரியேன் எனக்கூறி
பிரிந்ததேன் ?
என நேசம் தெரியவில்லையா ?
பாசம் உணரவில்லையா ?
உயிர்கவர்ந்து சென்றதேன் ?

சிதையிலிட்டு எரிக்க
மனமில்லை
உன்பாதியை சிதையிலிட்டு
எரிக்க மனம்
ஒப்பவில்லை !

ஏச்சுகள் உனை எட்டவில்லையா ?
பேச்சுகளின் ஏளனம் தாங்கவில்லை
இமையறுத்து இன்னமும் காத்திருக்கிறேன் !
எப்பொழுதாவது நீ
எனை கடத்திச்செல்வாயென !